சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7ம் தெருவைச் சேர்ந்த தம்பதியர் முருகன், செல்வி. இவர்கள் சங்கரன்கோவிலில் கடந்த 45 வருடமாக இட்லி கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் தற்போது இட்லி, வடை 2 ரூபாய்க்கும். டீ, முறுக்கு, அதிரசம் 5 ரூபாய்க்கும், பொங்கல் 10 ரூபாய்க்கும் நல்ல தரத்துடன் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கடை வைத்திருக்கும் பகுதி நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்தது. தொழிலாளர்களின் பசியை போக்கும் வகையில் மிகக்குறைந்த விலையில் ஒரு சேவையாக இந்த தம்பதியினர் இதை நடத்தி வருகின்றனர். குறைந்த விலை என்பதால் தொழிலாளர்கள் இங்கு சாப்பிட்டு தங்கள் பசியை போக்குகின்றனர். அதிகாலை 5 மணிக்கு கடை திறந்து, 9 மணி வரை இட்லி, வடை, இனிப்பு வகைகள், பொங்கல், பஜ்ஜி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.