உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் இதமான காலநிலை நிலவுகிறது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடை சீசன் தொடங்குவதை ஒட்டி சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மூன்று மாதத்திற்கு சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.