மழைகுறைந்து வெயிலின் தாக்கத்தால் வற்றி வரும் தடுப்பணை, குட்டைகள்: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் மழைப்பொழிவின்றி வறட்சி துவங்குவதால், கிராமங்களில் தடுப்பணை மற்றும் குட்டைகள் வற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்கள்  பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பனை மற்றும் குளம், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை காலங்களில் நீர்நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து தடுப்பணை மூலமாக சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் உயர்ந்து விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.  

இதில், ஆனைமலை, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைகாரன்புதூர், ஆழியார், சமத்தூர், கோமங்கலம், பொன்னாபுரம், வடக்கிபாளையம், ராமபட்டிணம், நெகமம், கோமங்கலம் உள்பட பல கிராமங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும், 125க்கும் மேற்பட்ட குளம் மற்றும் குட்டைகளும் அமைந்துள்ளது. இந்த தடுப்பணை, குளம், குட்டைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் உயர்ந்து காணப்படும். இந்நிலையில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடக்கிழக்கு பருவமழைக்கு பிறகு கடந்த சில மாதமாக மழை போயிற்று. அதிலும் பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது.

இடையே ஒருசில நாட்கள் மட்டும் சில மணிநேரம் மழை பெய்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிரித்து வறட்சி துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தடுப்பணை மற்றும் குளங்களில் தண்ணீர் வெகுவாக குறைந்தது. தற்போது மழை இல்லாததால் பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. மேலும், குளம் மற்றும் குட்டைகளிலும் தண்ணீர் பெருமளவு வற்றியபடி உள்ளது. கிராமங்களில் உள்ள நீர்தேக்க பகுதிகளில் தண்ணீர் வற்றியுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளதாக  வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆற்றோர பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வரும் சித்திரை பட்டத்தை எதிர்நோக்கி, விளை நிலங்களில் மானாவாரி பயிர்களை பயிரிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதை தொடர்ந்து, கோடை மழை பெய்து கைக்கொடுக்குமா என்ற ஏக்கத்தில்  விவசாயிகள் உள்ளனர்.

Related Stories: