பொதுபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: ஜாக்கிகள் வரவழைக்கப்பட்டு வீட்டை நகர்த்திய உரிமையாளர்

விருதுநகர்: பொது பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை இடிக்காமல் 14 அடிக்கு நகர்த்தி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையூரை சேர்ந்தவர் லக்ஷ்மணன் இவரது மனைவி பஞ்சவர்ணம் 2001 முதல் 2006 வரை பிள்ளையார் நத்தம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தார்.

அப்போது ஏற்பட்ட தேர்தல் பகை தான் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு ஒரு தனி நபரிடமிருந்து வீட்டுமனையை வாங்கி அதில் இரண்டு கடைகள் மற்றும் ஓர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீடு சாலைக்குரிய இடம் என்றும் சாலை தனியாருக்குரிய இடம் என்றும் குற்றம்சாட்டி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருச்சுழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அனைத்து ஆதாரங்களையும் சமர்பித்ததால் அவரது தரப்பு வெற்றிபெற்றது.

ஆனால் அவரிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமலேயே மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் ஜே.சி.பி யுடன் வீட்டை இடிக்க வந்துள்ளனர். ஆனால் வீட்டை இடிக்க வேண்டாம் என்றும் தான் வீட்டை நகர்த்திக்கொள்வதாகவும் கால அவகாசம் கேட்ட லக்ஷ்மணன் ராஜஸ்தான் மாநில தொழில் நுட்ப வல்லுநர்களை கொண்டு தற்போது 14 அடி வரை வீட்டை ஜாக்கிகளின் உதவியுடன் நகர்த்தியுள்ளார். அத்துடன் வீடும் 3 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.  

Related Stories: