கார் விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.!

செங்கல்பட்டு: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு வீடும் திரும்பினார்.

இந்த விபத்து தொடர்பாக மகாபலிபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் மார்ச் மாதம் 22-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்கள். ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை. எனவே கடந்த மார்ச் 23-ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜராகியுள்ளார். பிடிவாரண்டை ரத்து செய்ய கோரி அவர் ஆஜர் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: