சிதம்பரம்: ராகுல் காந்திக்கு எதிராக அராஜகம் மூலம் பாஜ தனது புதைகுழியை தோண்டிக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ராகுல்காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே அறவழிப் போராட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: ராகுல் காந்திக்கு எதிராக அராஜகத்தை மோடி அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பொதுவெளியில் அவர் எவ்வளவு பேசினாலும், மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது பதில் சொல்ல வேண்டிய அவசியம் மோடிக்கு உள்ளது.
பாஜ தனது புதை குழியை தோண்டிக் கொள்வதில் மிக ஆர்வமாக உள்ளது. ராகுல்காந்தி சிறுகுழந்தை அல்ல. எதையும் எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளார். அவருடைய இந்திய ஒற்றுமை பயணத்தை பார்த்து பாஜ அச்சப்படுகிறது. முதல் கட்டமாக அறப்போராட்டத்தில் இறங்கியுள்ளோம். சாலை மறியல், ரயில் மறியல், ஒவ்வொரு வட்டாரங்களிலும் தெருமுனை பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். மோடி அரசுக்கு எதிராக இந்தியா முழுவதும் மக்களை திரட்டுவோம். மகாத்மாகாந்தி ஒத்துழை இவ்வாறு அவர் கூறினார். இதேபோல சேலத்தில் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ஈரோடு, கோவை, டெல்டா மாவட்டங்கள், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கள்ளக்குறிச்சி உள்பட தமிழகம் முழுவதும் நேற்று சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் நாராயணசாமி கைது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் சார்பில் நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. பேரணியாக சென்று புதுச்சேரி ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.