கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தறிகெட்டு மின்னல் வேகத்தில் பறந்த லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் டிரைவர் தசரதன்(32). இவர் கட்டுமான பணிகளுக்கான எம்.சாண்ட், ஜல்லி கற்கள் லாரியில் ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் ஜல்லி ஏற்றிச்சென்று இறக்கி விட்டு, மீண்டும் ஓசூர் நோக்கி லாரியை ஓட்டி வந்தார். பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் தர்கா பகுதியில் லாரி வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தறிகொட்டு ஓடியது. முன்னால் சென்ற வாகனங்களை முந்தியபடியும் இடித்து தள்ளியபடியும் மின்னல் வேகத்தில் பறந்தது. தொடர்ந்து சர்வீஸ் சாலையில் சென்ற கார், டூவீலர்கள் மீது மோதி விட்டு, சாலை நடுவில் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி கம்பியை உடைத்துக் கொண்டு நின்றது.