நெல்லை:அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று நெல்லையில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி’ குஜராத்தில் வரும் ஏப்.17ல் தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இதுதொடர்பான சிறப்பு அழைப்பு நிகழ்ச்சி, நெல்லையில் நடந்தது. இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் பங்கேற்று பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி போல, தற்போது குஜராத் மாநில மற்றும் ஒன்றிய அரசு இணைந்து `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்த உள்ளது. குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மற்றும் மதுரை, சென்னை, நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களில் உள்ள கலாசார தொடர்பை கண்டறிய இந்த விழா உதவும். பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வந்த சவுராஷ்டிரா மக்கள், இந்த பகுதி மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.