நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி

திங்கள்சந்தை: நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் டைல்ஸ் கல்லை வைத்து கழுத்தை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள புதுக்குளத்தன்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (55). லாரி டிரைவர். இவர் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளையைச் சேர்ந்த அருள்பாபி (53) என்பவரை கத்தியால் குத்தியதில் அவர் இறந்தார். இந்த வழக்கில் ராஜனை போலீசார் கைது செய்து, நாகர்கோவில்  சிறையில் அடைத்து உள்ளனர். ராஜன் கைதாகி சுமார் இரண்டு மாதங்கள் ஆகிறது.

இந்நிலையில், விசாரணைக்காக நேற்று இரணியல் நீதிமன்றத்துக்கு ராஜன் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றம் வந்ததும் போலீசாரிடம் கழிவறைக்கு செல்லவேண்டும் என்று ராஜன் கூறியுள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்திற்குள் இருந்த கழிவறைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். கழிவறைக்கு சென்ற ராஜன், அங்கு உடைந்த நிலையில் கத்தி போன்று இருந்த டைல்ஸ் மூலம் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். போலீஸ் விசாரணையில், தன்னை யாரும் ஜாமீனில் எடுக்க வில்லையே என்ற வருத்தத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

Related Stories: