ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரசார் ரயில் மறியல்

ஆவடி: பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் பா.ஜ. எம்.எல்.ஏ வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த, குஜராத் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து, அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டு அடுத்து வரும் எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனை கண்டித்து, ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் மாநில இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் நரேந்திர தேவ், காங்கிரஸ் நகர செயலாளர் அமித் பாபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  ஒன்றிய அரசை கண்டித்தும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

அப்போது, 50க்கும் மேற்பட்ட ஆவடி போலீசார் மறியல் செய்தவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த ரயில் மறியல் போராட்டத்தால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.  கைது செய்தவர்களை ஆவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் ஆவடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: