விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ரூ.18 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள்: டிஆர்ஓ வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ரூ.18 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், மார்ச் மாதம் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக, மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தின் கீழ், 4 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் 2 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், 3 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், ரூ.3,795 மதிப்பில் தார்பாலினும், வேளான்மை பொறியியல் துறை சார்பாக, வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ், 9 நபர்களுக்கு பவர் டில்லரும், ஒருவருக்கு டிராக்டரும் என மொத்த மதிப்பீடு ரூ.12,50,000 மற்றும் தோட்டக்கலை சார்பாக, 2 விவசாயிகளுக்கு கலைஞர் திட்டத்தின் சார்பில், தலா ரூ.7500 வீதம் மானியமும் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா வழங்கினார்.  

இந்நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, நேர்முக உதவியாளர் (வே) கணேசன், உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், தோட்டக்கலை துணை இயக்குநர் கௌதமன், முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: