காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்: 31ம் தேதி 63 நாயன்மார்கள் ஊர்வலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 31ம் தேதி தேரோட்டம் மற்றும் 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடக்கிறது. கோயில் நகரமான காஞ்சிபுரத்தில், பஞ்சபூத தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் ஏலவார்குழலி அம்மை உடனுறை ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று விநாயகர் உற்சவத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை (26ம்தேதி) அதிகாலை 5 மணியளவில் நடைபெறும். இதனைதொடர்ந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நாளை (26ம் தேதி) பகல் பவழக்கால் சப்பரம், மாலை சிம்ம வாகனம், 27ம் தேதி காலை சூரியப் பிரபை, மாலை சந்திர பிரபை, 28ம்தேதி காலை பூத வாகனம், மாலை  தங்கமயில் வாகனம், 29ம்தேதி காலை  நாக வாகனம், மாலை வெள்ளி இடப வாகனம், 30ம்தேதி காலை வெள்ளி அதிகார நந்தி சேவை, மாலை  ஸ்ரீ கைலாச பீட ராவண வாகனம், விழாவின் முக்கிய உற்சவங்களான மார்ச் 31ம் தேதி பகல் 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன், கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி வீதி உலாவும், இரவு பிரபல உற்சவமான வெள்ளித்தேரும் நடைபெறுகிறது.

ஏப்ரல் 1ம் தேதி பகல் இரதோற்சவம், இரவு மகா அபிஷேகம், 2ம்தேதி காலை ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரதகாட்சி, மாலை 5 மணிக்கு பிட்சாடனர் தரிசனம், இரவு வெள்ளி குதிரை வாகனம், 3ம் தேதி பகல் ஆள்மேல் பல்லக்கு, இரவு தல மகிமை காட்சியான வெள்ளி மாவடி சேவை, 4ம்தேதி பகல் சபாநாதர் தரிசனம், இரவு பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் (5ம் தேதி விடியற்காலை) நடக்கிறது. அதனை தொடர்ந்து, 5ம் தேதி பகல் கந்தப்பொடி உற்சவம், இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம், 6ம்தேதி பகல் புருஷாமிருக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 7ம்தேதி பகல் சந்திரசேகரர் வெள்ளி இடத்தில் எழுந்தருளிச் சர்வ தீர்த்தத்தில் தீர்த்தவாரி, உற்சவ சாந்தி சிறப்பு, இரவு யானை வாகனத்துடன் கொடி இறக்கம் நடைபெறுகிறது‌.

இதனையடுத்து, 8ம்தேதி பகல் 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம், இரவு பொன் விமானத்தில் திருமுறை உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாக்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதனால்,  பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

* திருப்பணிக்கு ரூ.17 கோடி நிதி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மரத்தேர் மண்டபத்துக்கு, சுவாமி எழுந்தருள செய்யும் தேர் மண்டபம், கோயில் வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நூலகம் மற்றும் திருவிழாவிற்காக பந்தல் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை அறங்காவலர் குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல் மோகன் கூறியதாவது:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு அறங்காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளோம்.  

எனவே பொதுமக்களும், சிவனடியார்களும் திருவிழாவை சிறப்பாக நடத்த போதுமான  ஒத்துழைப்பு நல்க வேண்டும். இக்கோயில், திருப்பணியை தொடங்க தமிழ்நாடு அரசு  ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருவிழா நிறைவு பெற்றவுடன் கோயில்  திருப்பணிகள் தொடங்க ஆலோசித்து வருகிறோம் என அறங்காவலர் குழு தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் கூறினார். அப்போது, குழு உறுப்பினர்கள் ஜெகன்னாதன், விஜயகுமார், வரதன், கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: