போரூரில் தண்ணீர் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயம்

பூந்தமல்லி: போரூரில் தண்ணீர் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார். பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு நேற்று போரூர் நோக்கி ரமேஷ் (33), என்பவர் டிரக்டர் வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது, மவுண்ட் - பூந்தமல்லி சாலை, போரூர் சிக்னல் அருகே வேகமாக சென்று திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், இது குறித்து போரூர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்த டிரைவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சாலையில் கவிழ்ந்த டிராக்டரை கிரேன் எந்திரம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிவேகமாக சென்று சாலையின் வளைவில் திருப்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அதிர்ஷ்டவசமாக தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் சாலையில் கவிழுந்தபோது அருகில் வாகன ஓட்டிகள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: