புதுச்சேரியில் ரேஷன் கடைகளைத் திறக்க ஒன்றிய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: இலவச அரிசியுடன், சர்க்கரை, கோதுமை, சிறுதானியம் உள்ளிட்ட பொருட்களை தர ரேஷன் கடைகளைத் திறக்க மத்திய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுவை சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது ரேஷன் கடைகள் தொடர்பாக நடந்த விவாதம் வருமாறு: எதிர்கட்சித்தலைவர் சிவா ரேஷன் கடைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது; ரேஷன் கடைகளை மூட ஒன்றிய அரசு உத்தரவிடவில்லை. இங்குள்ள அதிகாரிகள்தான் காரணம். ஒன்றிய அரசு அரிசி போடுவதை நிறுத்தச் சொல்லவில்லை. அரசு கவனம் செலுத்தவில்லை. ரேஷன்கடை திறப்பது குறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும்.

பாஜக உறுப்பினர்களே முறையிட்டுள்ளனர். அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டு ரேஷன் கடைகளை திறக்காமல் இருக்கக்கூடாது. இந்தியாவிலேயே ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் என்ற பெருமை புதுவைக்கு தேவையா என அரசு யோசிக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் நேரடி பணப்பரிமாற்ற முறையை செய்யுங்கள். புதுச்சேரி என்ன சோதனை எலியா அப்போது ஒட்டுமொத்தமாக திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், சுயேச்சை எம்எல்ஏக்கள் நேரு, பி.ஆர்.சிவா ஆகியோர், ரேஷன்கடைகளை மீண்டும் திறந்து இலவச அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது; ஒன்றிய அரசு நேரடி பண பரிமாற்றம் மூலம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கி வருகிறோம். 3 மாதத்திற்கு சேர்த்து பயனாளிகளின் வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. மண்ணெண்ணெய், பாமாயில், கோதுமை ரேஷன் கடைகளில் வழங்குவதில்லை. ரேஷன் ஊழியர்கள் சம்பளத்திற்காக ரூ.7 கோடி நிதி வழங்க கோப்பு தலைமை செயலருக்கு அனுப்பினோம். தலைமை செயலர் சில கேள்விகளை கேட்டு கோப்பு அனுப்பியுள்ளார். இலவச அரிசியுடன், சர்க்கரை, கோதுமை, சிறுதானியம் உள்ளிட்ட பொருட்களை தர ரேஷன் கடைகளைத் திறக்க ஒன்றிய அரசு, ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

Related Stories: