குமரி ஆபாச பாதிரியார் வழக்கில் விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்

நாகர்கோவில்: குமரி ஆபாச பாதிரியார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வர வேண்டிய பெண் ஒருவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த சூழால் குடையால் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). பாதிரியாரான இவர் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் வகையில் சாட்டிங் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த 19ம்தேதி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். இதற்கிடையே, பாதிரியார் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் போன்றவைகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

கைதான பாதிரியார், தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கபபட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை, மிரட்டி லேப் டாப், செல்போன்கள் பறிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதில் லேப் டாப்பை போலீசார் கைப்பற்றினர். பறிக்கப்பட்ட செல்போன் இன்னும் கிடைக்கவில்லை. பாதிரியாரின் செல்போனில் வேறு ஏதாவது ஆபாச படங்கள் உள்ளதா என்பதும் தெரியவில்லை? அவரது செல்போனில் ஆபாச படங்கள் இருந்தால் அது வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  

இதற்கிடையே பாதிரியார் வழக்கில் விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் ஒருவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவரது சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுவதால், அவரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை தற்போது காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் சாட்டிங், வீடியோ, போட்டோக்களில் உள்ள அனைத்து இளம்பெண்களிடமும் விசாரணை நடத்தப்படும். காவல் நிலையங்களுக்கு அவர்களை அழைக்காமல், நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று ரகசிய வாக்குமூலம் பெறப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories: