திருச்சி: திருச்சி அருகே நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். பஞ்சபூத தளங்களில் போற்றப்படும் திருவானைக்காவல், அகிலாண்டீஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி தேரோட்டம் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி கடந்த 18ம் தேதி பங்குனி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஒன்று ஜம்புகேஸ்வரரும் மற்றொன்றில் அகிலாண்டேஸ்வரி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதை அடுத்து சிவனடியார்கள் முன்னே செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரண்டு தேர்களும் நான்கு ரத வீதிகளில் வளம் வந்து பின்னர் நிலையை அடைந்தனர். தேரோட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர்.