வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு-விவசாயிகள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி : பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின் அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு வழங்கி வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, அரசம்பட்டி, சந்தூர், புலியூர், பெண்டஅள்ளி, வேலம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, தாதம்பட்டி மற்றும் கேஆர்பி அணை படுகை பகுதியில் சுமார் 36 ஆயிரம் ஏக்கரில் 15 லட்சத்திற்கும் மேல் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு சாகுபடி செய்யப்படும் தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அரசம்பட்டி பகுதியில் தென்னங்கன்று உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு கோடி தென்னை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அரசம்பட்டி தென்னை தரமாகவும், அதிக விளைச்சல் தருவதால் மஞ்சமேடு, புலியூர், பண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான தென்னை ரகங்கள் உற்பத்தி செய்து இந்திய அளவில் இன்றுவரை அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் அரசம்பட்டி பகுதியை சேர்ந்த கென்னடி என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு முதல்வர் அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு வழங்கி வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் பேரில் போச்சம்பள்ளி பகுதியில் தென்னை ஆராய்ச்சி மையம் உருவாக்கி, விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை லாபகரமாக மாற்ற விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல லட்சம் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் போச்சம்பள்ளியில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையை நிறுவி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். எண்ணெய் ஆலையை நிறுவி, வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ஆண்டு வருமானம் கிடைக்க வழி உள்ளது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெறும்.

இதனால் பல ஆயிரம் வேளாண் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றனர். இந்த அறிவிப்பையொட்டி தென்னை விவசாயிகள் அரசம்பட்டி பஸ் நிலையம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி, தொழிலதிபர் அரங்கநாதன், பிரபு, முருகேசன், மணிகண்டன், வெங்கடேஷ், சரவணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: