தாம்பரம்: இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 44 கி.மீ நீளமுள்ள அடையாறு ஆற்றின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும்.