ஏற்கனவே உள்ளது பழுதாகி விட்டதால் முத்துப்பேட்டையில் புதிய ஆய்வு மாளிகை கட்டிடம் கட்டவேண்டும்: அமைச்சரிடம், திமுகவினர் மனு

முத்துப்பேட்டை: ஏற்கனவே உள்ள கட்டிடம் பழுதாகி விட்டதால், முத்துப்பேட்டையில் புதிய ஆய்வு மாளிகை கட்டிடம் கட்டவேண்டும் என்று அமைச்சரிடம் திமுகவினர் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பொதுபணித்துறை அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தில் நூறாண்டுகளை கடந்த ஆய்வு மாளிகை (பயணிகள் விடுதி) இருந்த கட்டிடமும் உள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய அதிகாரிகள் அமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக்காக வருகையில் இங்கு தங்கிச்செல்வதுண்டு.

சில வருடங்களுக்கு முன்பு இதில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக அதிலிருந்து காலி செய்து இங்கு தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் அங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடம்மாறி சென்று விட்டன. அதன் பிறகு இக்கட்டடத்தில் தாலுக்கா அலுவலகம் இயங்க போவதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை நடக்கவில்லை. இந்நிலையில் முன்பு இங்கு இயங்கி வந்த ஆய்வு மாளிகைக்கு பதில் கோயிலூர் பைபாஸ் சாலையில் புதிய ஆய்வு மாளிகை புதிய கட்டிடம் கட்டி பயனுக்கு வந்துவிட்டது. இதையடுத்து இந்த கட்டிடம் உபயோகத்திற்கு தேவை இல்லை என்பதால் பழமையான இக்கட்டடத்தை பொதுபணித்துறையினரும் பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்து பல்வேறு அதிகாரிகள், தலைவர்கள் வந்து தங்கிச்சென்ற இக்கட்டிடம் நினைவுச்சின்னமாக போற்றப்பட வேண்டும். ஆனால் கட்டடத்தை10 ஆண்டாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் அதிகாரிகள் பராமரிக்காமல் பாழடைய செய்துள்ளதால் தற்போதைய கட்டிடத்தை விஷஜந்துகளின் குகையாகவும், வவ்வால் ஆந்தைகள் மட்டுமே தற்போது பயன்படுத்துகின்றன.

இந்த வளாகத்தை சுற்றி சுற்றுசுவர் எழுப்பி கம்பி கேட்டு அமைத்து இரவில் பணியாளர்கள் பூட்டி சென்றாலும், சுற்றுசுவர் உடைந்துள்ள பகுதி வழியாக புகுந்து சென்று சமூக விரோதிகளின் தங்களின் கூடாரமாகவும், குடிமகன்கள் பாராகவும், பயன்படுத்தி வருகின்றனர். இரவில் அப்பகுதி இருண்டு காணப்படுவதால், இரவில் மக்கள் இவ்வழியாக வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே இந்த ஆய்வு மாளிகையை சீரமைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதனை சீரமைத்து நினைவு சின்னமாக போற்ற வேண்டும். இல்லையேல் இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரும், திமுக மாவட்ட துணைச்செயலாளருமான எம்எஸ்கார்த்திக், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, முத்துப்பேட்டையில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான பழைய ஆய்வு மாளிகைக் கட்டிடம் மிகவும் சிதலமடைந்துள்ளது, மோசமான நிலையில் உள்ளதால் பாம்புகள் ஏராளமாக குடியேறிவிட்டன. எனவே அந்த கட்டிடத்தை உடன் அகற்றி புதிய ஆய்வு மாளிகை கட்ட ஆவன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: