நெல்லை சிறுவனை கடத்தி இளம்பெண் மேக்கப் அணிவித்து பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்: சூலூரில் பயங்கரம்

சூலூர்: நெல்லை சிறுவனை சமூக வலைதளம் மூலம் பழகி கோவைக்கு கடத்தி, பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல் போலீசில் சிக்கியது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கு சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் சிறுவனை தொடர்பு கொண்ட அந்த கும்பல் ஆசை வார்த்தை கூறி கோவைக்கு வருமாறு அந்த சிறுவனை அழைத்துள்ளது. அந்த சிறுவனும் நெல்லையில் இருந்து கிளம்பி கோவைக்கு வந்துள்ளார்.

அவர் கோவை வந்து இறங்கியவுடன் அவரை ஒரு நபர் அழைத்துக் கொண்டு பள்ளபாளையம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த ஒரு கும்பலிடம் அந்த சிறுவனை ஒப்படைத்துவிட்டு 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு அந்த நபர் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து சிறுவனுக்கு அந்த கும்பல் பெண்கள் அணியும் ஆடைகளை கொடுத்து தலைமுடியை அலங்கரித்து இளம்பெண்போல மேக்கப் செய்து மாற்றியுள்ளனர். மேலும் ஒரு வாரமாக அந்த சிறுவனை இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி ஆண்களிடம் கட்டாய வன்புணர்வு செயல்களில் ஈடுபடுத்தி கொடுமை செய்துள்ளனர்.

அதன் மூலம் அந்த கும்பல் பணம் சம்பாதித்ததாக தெரிகிறது. மேலும் சிறுவன் அணிந்திருந்த 2 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றையும் அவர்கள் பறித்து வைத்துக்கொண்டு தரமறுத்துள்ளனர். மனவேதனை அடைந்த அந்த சிறுவன், தனது தந்தைக்கு ரகசியமாக செல்போன் மூலமாக தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு வாய்ஸ் மெசேஜ் மற்றும் லொக்கேசன் அனுப்பி உள்ளார். அதன் பேரில் சூலூருக்கு வந்த சிறுவனின் குடும்பத்தினர், குறிப்பிட்ட அந்த கும்பலை தேடி சென்றனர். அப்போது அதுபோன்ற ஒரு சிறுவன் தங்களிடம் இல்லை என்றும், அந்த சிறுவனை பார்த்ததே இல்லை என்றும் கூறி அந்த கும்பல் திருப்பி அனுப்பிவிட்டது.

இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அந்த கும்பலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். பின்னர் அந்த சிறுவன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். இளம்பெண் வேடத்தில் இருந்த மகனை பார்த்து கண்ணீர் விட்ட பெற்றோர் அவரை அணைத்துக் கொண்டனர். நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுத சிறுவன் பெற்றோருடனே செல்ல போலீசாரிடம் சம்மதம் தெரிவித்தார்.

மேலும் சிறுவனிடமிருந்து பறித்த 2 பவுன் தங்க நகையையும், ரூ.20 ஆயிரத்தையும் அந்த கும்பல் திருப்பி கொடுத்தது. இதைத்தொடர்ந்து கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் மீண்டும் இதுபோல் செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: