‘ஜெயலலிதா பற்றி பேச தகுதியில்லை’ அண்ணாமலைக்கு மன நல சிகிச்சை: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கு

ஓசூர்: ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை, அவர் மனநல சிகிச்சை பெற வேண்டும் என  ஓசூரில் புகழேந்தி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி, அவரைவிட தனது மனைவி நூறு மடங்கு உயர்ந்தவர் என்றும், தாயார் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என்றும் பேசி இருக்கிறார். இதுபோன்று பேசுவதற்கு, அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

 இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு பேசி வரும் அண்ணாமலையை ஏற்கனவே பல தலைவர்கள், உளவியல் ரீதியாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வரும் வேளையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக விமர்சனங்களை வைத்து பேசுகிறார். எனவே, அவர் ஒரு நல்ல மனநல மருத்துவமனையை அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது. இதுபோன்ற விமர்சனங்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து, தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருவதற்கு அவர்களது நடவடிக்கைகளும் மக்களின் எதிர்ப்பும்தான் காரணம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Related Stories: