மாதிரி பள்ளிகளில் நுழைவு தேர்வு இல்லை: கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது, நுழைவுத் தேர்வு போன்ற எந்த தேர்வும் நடத்த மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சென்னையில், குறும்படங்களை மாணவர்கள் எடுக்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மாணவர்களுக்கு இறுதிக் கட்டப் பயிற்சி சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் 150 பேர் பங்கேற்கின்றனர். குறும்படத்துக்கான முழுத்திறனை மாணவர்கள் காட்ட வேண்டும். குறும்படப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவர். கல்வி தவிர தனிப்பட்ட திறமைதான் நமக்கான சிறப்பான வாழ்க்கையை பெற்றுத் தரும்.

மேலும், மாதிரிப் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் உள்பட பல அளவீடுகளின் அடிப்படையில் சேர்க்கப்படுவர். நுழைவுத் தேர்வு என்பது கிடையாது. மாதிரிப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதே நேரத்தில் பிற மாணவர்களையும் தொடர்ந்து படிக்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெயில் காலம் தொடங்க உள்ளதால், ஏற்கெனவே திட்டமிட்டப்படியும், தேர்வு அட்டவணைப்படியும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். தர்மபுரி அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்படும்ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையில் நிதி சார்பற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து வருகின்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்படும்.

* 6 வயதில் 1ம் வகுப்பு சேர்க்கை

இது குறித்து அமைச்சர் மகேஷ் கூறியதாவது, ‘‘ஒன்றாம் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படும் போது, ஆறுவயதுக்கு மேல் சேர்க்க வேண்டும். தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை தயாரிக்கும் பணிகள் நடப்பதால் அந்த பணிகள் ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படுமானால் அந்த பரிந்துரையின்  அடிப்படையில் முதல் வகுப்பில்  குழந்தைகள் சேர்ப்பதற்கான வயது குறித்து அறிவிக்கப்படும்’’ என்று கூறினார்.

Related Stories: