கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே துரிதமாக உருவாகும் உயர்மட்ட பாலம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை மற்றும் பூண்டி அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாண்டஸ் புயல் காரணமாக மழை பெய்ததால் பூண்டி ஏரி நிரம்பியது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 500 கன அடியிலிருந்து படிப்படியாக உயர்த்தி 10 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம் அரும்பாக்கம், மேலானுர், மூலக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் செல்லமுடியாமல் திருவள்ளூர்-மெய்யூர் போக்குவரத்துக்கு தடைபட்டது.

இவர்கள் திருவள்ளூருக்கு சீத்தஞ்சேரி அல்லது வெங்கல் வழியாக செல்ல 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிகொண்டு செல்ல வேண்டிய நிலை உருவானது. மேலும் கடந்த 2021  நவம்பர் மாதம் பெய்த மழையின் போதும், 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதமும் பூண்டி ஏரி திறப்பின் போதும் இந்த தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தகது. இந்நிலையில் மெய்யூர் ஆற்றின் தற்காலிக தரைப்பாலம் அவ்வப்போது சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மெய்யூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.13.60 கோடியில் புதிய உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றன. துரிதமாக நடைபெற்ற இந்தப் பால கட்டுமானப்பணி தற்போது 80 சதவீதம் முடிந்துள்ளது.

Related Stories: