சமூக வலைதள நண்பரின் மூலம் கர்ப்பம் யூடியூப் சேனலை பார்த்து குழந்தை பெற்ற 15 வயது சிறுமி: பச்சிளங் குழந்தையை கொன்று மறைத்த கொடூரம்

நாக்பூர்: சமூக வலைதள நண்பர் மூலம் கர்ப்பமான 15 வயது சிறுமி, யூடியூப் சேனலை பார்த்து குழந்தை பெற்றார். பின்னர் அந்த குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அடுத்த அம்பாசாரியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து தனது வீட்டில் பெண் குழந்தையைப் பிரசவித்துக் கொண்டார். பின்னர் அந்த குழந்தையைக் கொன்றதாக போலீசார் கூறினர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘சமூக ஊடகங்களில் பழகிய ஒருவரால் நாக்பூரை சேர்ந்த 15 சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு தள்ளப்பட்டார். பின்னர் அவர் கர்ப்பமானார். தான் கர்ப்பமான விஷயத்தை தனது தாயிடம் தெரிவிக்கவில்லை. வெளியே சொன்னால் பிரச்னையாகிவிடும் எனக்கருதி, தானாகவே பிரசவம் பார்ப்பது எப்படி? என்பது குறித்து சமூக வலைதளமான யூடியூப் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினார்.

தொடர்ந்து கடந்த 2ம் தேதி அவர் தனது வீட்டில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். உடனடியாக பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றார்.

பின்னர் அந்த பச்சிளங் குழந்தையின் உடலை தனது வீட்டில் இருக்கும் பெட்டியில் மறைத்து வைத்தார். அவரது தாய் வீடு திரும்பிய போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையாக இருந்த சிறுமியிடம் விசாரித்தார். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சிளங் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய நபர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: