ஷில்லாங் : மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது. மேகாலயாவில் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் இறந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மேகாலயாவில் பலமுனைப் போட்டி நிலவி வந்தது. இங்கு ஆளும் தேசிய மக்கள் கட்சியை (என்பிபி) எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) கட்சிகள் போட்டியிடுகின்றன.