டெல்லி துணை முதல்வர் கைது வைகோ கடும் கண்டனம்

சென்னை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு புனைந்து, மத்திய புலனாய்வு நிறுவனத்தை ஏவிவிட்டு பாஜ அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 2021-22ம் ஆண்டுக்காக டெல்லி மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி கவர்னர் சிபிஐ விசாரனைக்கு பரிந்துரை செய்தார்.

ஆனால் மதுபானக் கொள்கையை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கைவிட்ட பிறகும், சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தும் டெல்லி மாநிலத்தில் கவர்னர் மூலம் பாஜ இரட்டை ஆட்சி நடத்தி வருகிறது. எதிர்க் கட்சிகளை ஒடுக்குவதற்கு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளை பாஜ அரசு பயன்படுத்தி வருகிறது. அடுத்து முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று டெல்லி பாஜ தலைவர் கபில் மிஸ்ரா கொக்கரிக்கிறார். அடக்குமுறை மூலம் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கலாம் என்று பாஜ நினைப்பது பகல் கனவாகவே முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: