விழுப்புரம்: அன்புஜோதி ஆசிரமம் வழக்கில் கைதான 6 பேர் சிபிசிஐடி காவல் முடிந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றவர்கள் சிலர் மாயமானதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் வந்தது. இதையடுத்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 6 பேரிடம் கடந்த 3 நாட்களாக சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து, நேற்று மாலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.