ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளுக்கு தடை: டெல்லி அரசு அதிரடி.! தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம்

டெல்லி: பைக் டாக்சி சேவைகளை தடை செயது டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவடும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. ரேபிடோ, ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோ, காரைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றனர். இந்த சேவையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர்.

மேலும் முறையான உரிமம் இன்றியும், சாலை விதிகளை மதிக்காமலும் பலரும் பைக் டாக்ஸி சேவையில் பணிபுரிந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி சேவைகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது.

வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரமும் செய்ய முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: