நியூயார்க்: மும்பை உள்ளிட்ட கடலின் மட்டம் உயர்வதால் உலகம் முழுவதும் 90 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் ெசயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், ‘கடல் மட்ட உயர்வு - சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தாக்கங்கள்’ குறித்த மாநாட்டில் பேசுகையில், ‘கடந்த நூற்றாண்டைக் காட்டிலும் தற்போது உலக சராசரி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதல் 1.5 டிகிரிக்கு குறைந்தாலும், கடல் மட்டம் இன்னும் கணிசமாக உயரும்.
குறிப்பாக கெய்ரோ, லாகோஸ், மாபுடோ, பாங்காக், டாக்கா, ஜகார்த்தா, மும்பை, ஷாங்காய், கோபன்ஹேகன், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், புவெனஸ் அயர்ஸ், சாண்டியாகோ போன்ற மெகா நகரங்கள் கடல் மட்டம் உயர்வால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 900 மில்லியன் (90 கோடி) மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதாவது பூமியில் வசிக்கும் மக்களில் பத்து பேரில் ஒருவர் கடல் மட்டம் உயர்வால் பாதிக்கப்படுவர். கடலில் எழும் பேரழிவு மற்றும் பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்கத் தேவையான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க உலகளாவிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.