விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பேருந்து நின்று செல்லாததை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.விழுப்புரம் அருகே கள்ளிப்பட்டு, வடுவம்பாளையம், குச்சிபாளையம், பஞ்சமாதேவி, வி.அகரம், வாணியம்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து கோலியனூர் மற்றும் விழுப்புரம் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் சென்று மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு நகரப் பேருந்தில் சென்று வர இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை பள்ளி நேரம் துவங்கும் போது 7 மணி முதல் 9 மணி வரை செல்லக்கூடிய அரசு நகர பேருந்துகள் கள்ளிப்பட்டு, வி.அகரம், வாணியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.