டெல்லி: ஒன்றிய அரசின் கனரகத் தொழில்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பேட்டரியின் விலைகளைக் குறைக்கும் வகையில், மேம்பட்ட வேதியியல் செல்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.25,938 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது; மின்சார வாகனங்களுக்கான சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.