காவிரி பாசன மாவட்டங்களில் 2 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூரில்நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 519 கொள்முதல் நிலையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 519, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 159, மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 என மொத்தம் 1284 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திற்கும் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையில் நெல் மூட்டைகள் வருகின்றன.

ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அவற்றை அடுக்கி வைக்க போதிய இட வசதி இல்லாததால், தினமும் 1000 மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல கொள்முதல் நிலையங்களில் தினமும் 500-600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதனால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள், நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

உலகிலேயே சபிக்கப்பட்ட தொழில் விவசாயம் தான் என்று சொல்லும் அளவுக்கு உழவர்களில் நிலை மோசமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உழவர்கள் ஏதோ ஒரு சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். நடப்பாண்டிலாவது அவர்களுக்கு எந்த வகையான பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். அதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகள் அனைத்தும் அதே நாளில் கொள்முதல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்; அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளை இருப்பு வைக்கும் அளவுக்கு கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: