ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு நன்றி.! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை

சென்னை: அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும், கே.எஸ்.தென்னரசுக்கு பாரதிய ஜனதா கட்சி, தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகக் களம் காணும் கே.எஸ்.தென்னரசு நல்வாழ்த்துக்களையும், பாஜகவின் நல்லாதரவையும், தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: