சென்னை: மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 மையங்களில் கணினி வழியில் இன்று நடக்கிறது. இத்தேர்வை 4968 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 4969 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் எழுத்து தேர்வுக்கு ஆண்கள் 2405 பேர், பெண்கள் 2561 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என 4968 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு இன்று நடக்கிறது காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது. மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல்(பட்டயப்படிப்பு தரம்), விலங்கியல்(பட்டயப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது.