பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் பருவம் தவறிய கனமழையால், பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரண உதவியாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் 29.1.2023 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது 30.1.2023 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.

இந்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டுள்ளது. பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவலறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மூத்த அதிகாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திடவும், விவசாயிகளிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியவும் கடந்த 4ம் தேதி உத்தரவிட்டார்.

அதோடு மட்டுமல்லாமல், கனமழையால் பாதிக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடிக் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்திடும்போது, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட உரிய தளர்வுகளை வழங்கிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக கனமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ததோடு, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் சந்தித்து விளக்கியதோடு, அதுதொடர்பான அறிக்கையினையும் வழங்கினர்.அமைச்சர்களின் கருத்துக் கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, பின்வரும் நிவாரண தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும். கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் பிரபாகர், பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் ராமன், வேளாண்மை துறை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: