சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11.01.2023 முதல் 01.02.2023 வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் என மொத்தம் 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய நபர்களின் மீது ரூ.1,36,000 அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாக கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையுடனும், அழகுடனும் பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்றுகள் அமைத்தல், சாலை மையத் தடுப்புகளில் அழகிய செடிகளை அமைத்தல் என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தவிர்ப்பதில் பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள் மற்றும் மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: