பின்னணி பாடகி வாணிஜெயராம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பின்னணி பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இந்திய திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணி பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்டபோது எனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தேன்.

அறிவிக்கப்பட்ட விருதை பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். பழம்பெரும் பின்னணி பாடகியான வாணிஜெயராம்  மறைவு, இசையுலகை பொறுத்தவரை  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘காலத்தால் அழியாத பல திரைப்பட பாடல்களை  பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமான செய்தி அறிந்து மிகவும் மன  வருத்தம் அடைந்தேன். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து  தெரிவித்துக் கொள்கிறேன்’ என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: