பழநி: பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக்காண சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த ஜன. 29ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்த பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு இரவு 7.30 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் நடந்தது. வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பழநி நகரில் நேற்று காலையில் இருந்தே தூறல் மழை பெய்தது. எனினும் தைப்பூசத்தையொட்டி காலை முதலே பழநியில் பக்தர்கள் குவிய துவங்கினர். அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வந்தனர். காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது.