ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை சரிவு: இல்லத்தரசிகள் சற்று மகிழ்ச்சி

சென்னை: ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை நேற்று அதிரடி சரிவை சந்தித்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 720 குறைந்து, ஒரு சவரன்  ரூ.43,320க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை சவரன் 44  ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள்  சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை வீழ்ச்சி, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில்  இருந்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் ஒரு பகுதியாக தங்கம் விலை  கடந்த டிசம்பர் 31ம் தேதி சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்து 40க்கு விற்கப்பட்டது. 28 மாதத்துக்கு  பிறகு தங்கம் விலை மீண்டும் 41 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து, ஜனவரி 14ம்  தேதி சவரன் ரூ.42 ஆயிரத்தை கடந்தது. அன்றைய தினம் தங்கம் விலை ரூ.42,368க்கு  விற்கப்பட்டது. அதன் பிறகு ஜனவரி 26ம் தேதி தங்கம் விலை சவரன்  ரூ.43,040க்கும் விற்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சவரன்  ரூ.43,328க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அந்த சாதனையை ஜனவரி 26ம் தேதி விலை உயர்வு நெருங்கியது. அதன் பிறகு தங்கம்  விலை ஏறுவதும், பெயரளவுக்கு குறைவதுமாக இருந்தும் வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,338க்கும், சவரன்  ரூ.42,704க்கு விற்கப்பட்டது. இதற்கிடையில் பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி பொருட்களுக்கான  இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. அதாவது, வெள்ளிக்கட்டிகள் மீதான  அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதுடன் தங்க நகைகள் இறக்குமதி  வரியும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. பட்ஜெட்டின் தாக்கம் உடனடியாக தங்கம்  விலையிலும் எதிரொலித்தது. பட்ெஜட் தாக்கல் செய்யப்பட்ட 1ம் தேதியே தங்கம் விலை கிராமுக்கு ரூ.77 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,415க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை புதிய  உச்சம் தொட்டு வரலாறு காணாத சாதனையை படைத்தது. அதாவது, கிராமுக்கு  ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,505க்கும், சவரனுக்கு ரூ.720  அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,040க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1336 வரை உயர்ந்தது.

அதே நேரத்தில் கடந்த 31ம் தேதி முதல் 2ம் தேதி (நேற்று முன்தினம்) வரை சவரன் ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் படைத்தது. இந்த வரலாறு காணாத தங்கம் விலை ஏற்றம் திருமணம் உள்ளிட்ட விசேஷத்திற்காக சிறுக, சிறுக பணம் சேர்த்து நகை வாங்க காத்திருந்தவர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. சொல்லப் போனால் அவர்களை நிலை குலைய வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம், ஒரு மாதத்தில் சவரன் ரூ.3 ஆயிரம் வரை விலை அதிகரிப்பே ஆகும். மேலும்  தங்கம் விலை உயருமோ என்ற ஏக்கமும் அவர்களிடம் இருந்து வந்தது. தங்கம் விலை மேலும், அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில்  குறைந்தது. அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து  ஒரு கிராம் ரூ.5,440க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.43,520க்கும்  விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைவு இல்லத்தரசிகளை சற்று ஆறுதல்  அடைய செய்திருந்தது. இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குள் மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் விலையை நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.5,415க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.43,320க்கும் விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: