செய்யாறு: ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்கா புதுப்பாளையம் கூட்டு சாலையில் பாமக சார்பில் 2.0 விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், ‘குட்கா தடை சட்டம் தமிழகத்தில் செல்லாது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசு குட்கா தடைக்கு அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும். 2 மாதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு காரணம் ஆளுநர்தான். தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்ததும் ஒரு சொட்டு மதுகூட இல்லாத பூரண மதுவிலக்குக்கு தான் முதல் கையெழுத்து’ என்றார்.