காப்புக்காடுகளை சுற்றி 1 கி.மீ தூரத்துக்கு குவாரி செயல்பட விதித்த தடையை தளர்த்திய அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழ்நாடு அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புகாடுகள் அமைந்துள்ள பகுதிகளை  சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என்று 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு கனிமவள விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு காப்பு காடுகள் நீக்கப்பட்டு  அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து மாற்றத்துக்கான இந்தியா என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதன் மூலம்  அப்பகுதிகளில் குவாரி நடவடிக்கைகள் தொடங்கப்படலாம். இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் வன விலங்குகளுக்கும் ஈடுகட்ட முடியாத பாதிப்பை ஏற்படுத்தும்.  எந்த நியாயமான காரணமும் இல்லாமல், காப்புக்காடுகளில் குவாரி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு மார்ச் 2ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: