சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 961 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்து அறிவுரை

சென்னை: சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள், பணம் கேட்டு மிரட்டிய குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 961  குற்றவாளிகள் நேரில் சென்று கண்காணித்து, அறிவுரை வழங்கப்பட்டது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 34 குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாகயிருந்த 7  குற்றவாளிகள் என  மொத்தம்  44  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.  23 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 23 குற்றவாளிகள் நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா சென்னை நகரமாக மாற்ற மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டும் குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (01.02.2023) ஒரு நாள் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டனர்.

இச்சோதனையில், 822 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. குற்றச்செயலில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  29 தலைமறைவு குற்றவாளிகள், என மொத்தம் 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே 2,505 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (01.02.2023) மட்டும் 15 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளியிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெற்றும், 19 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெற ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகயிருந்த 2 குற்றவாளியின் இருப்பிடம் அறிந்து விசாரணை செய்யப்பட்டது. ஏற்கனவே, 403 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல, நேற்றைய (01.02.2023) சிறப்பு சோதனையில், கொலை முயற்சி வழக்கு அல்லது 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 139 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்தும், விசாரணை செய்தும், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் மற்றும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5 குற்றவாளிகள், வெகுநாட்களாக தலைமறைவாகயிருந்த 7 குற்றவாளிகள் என  14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்குகளில் தொடர்புடைய 121 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலும், 628 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நேநற்று (01.02.2023) நடைபெற்ற சோதனையில், 8 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 4 குற்றவாளியிடமிருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெற ஆயத்த பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகயிருந்த 1 குற்றவாளியின் இருப்பிடம் அறிந்து விசாரணை செய்யப்பட்டது. ஆக நேற்று (01.02.2023) நடைபெற்ற சிறப்பு சோதனையில், சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள், கொலை முயற்சி, 2க்கும் மேற்பட்ட அடிதடி மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 961 குற்றவாளிகள் நேரில் கண்காணித்தும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் , பிடியானை பிறப்பிக்கப்பட்ட 34 குற்றவாளிகள் 7 தலைமறைவு குற்றவாளி என 44  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

23  குற்றவாளிகளிடம்  நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும், 23  குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாகயிருந்த 3 குற்றவாளிகளின் இருப்பிடம் அறிந்து விசாரணை செய்யப்பட்டது. ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு வருவதால், குற்றச் செயல்களில் ஈடுபடும் போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்கள் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.

Related Stories: