‘இரட்டை இலை எங்ககிட்டதான் இருக்கு’ ஓபிஎஸ் அணி

அதிமுக ஓபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான  கு.ப.கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று கூறியவர்கள் வேட்பாளரை  அறிவிக்க முடியாமல் திணறினார்கள். அவர்களுக்கு கடைசி வரை ஆள்  கிடைக்கவில்லை. இரட்டை தலைமை வேண்டும் என்று கூறியவர்கள் உடனடியாக  வேட்பாளரை அறிவித்துள்ளோம். பாஜ வேட்பாளரை அறிவித்தால், அதன்பின் எங்களது நிலைபாட்டினை அறிவிக்கிறோம்.  50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட சின்னம் இரட்டை இலை. அதனை முடக்குவதற்கு  ஓபிஎஸ் ஒரு காலத்திலும் துணை போகமாட்டார். எங்களுக்கு இரட்டை இலை  சின்னம் கிடைக்குமா?  கிடைக்காதா? என்பது தேர்தல் ஆணையம்தான் முடிவு  செய்யும். இரட்டை சிலை சின்னம் தொடர்பான பதிலை, நாளை (இன்று) எங்களது  வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். இரட்டை சிலை சின்னம்  தற்போதைக்கு எங்களிடம்தான் உள்ளது. நாங்கள்தான் கழக ஒருங்கிணைப்பாளர்.  எங்களுக்குதான் சின்னம். கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  இருவரும் கையெழுத்து போட்டு கொடுத்தால்தான் இரட்டை இலை கிடைக்கும்.  இவ்வாறு கூறினார்.

* வேட்பாளர் அறிமுக கூட்டம் எடப்பாடி பங்கேற்கவில்லை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், கருப்பணன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, பொன்னையன், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் தமாகா நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்ட தகவல் வெளியானது. இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தென்னரசுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து வேட்பாளர் தென்னரசு கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்தனர். ஆனால் வராதது நிர்வாகிகள், தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வேட்பாளர் தென்னரசு வாழ்த்து பெற்றார்.

Related Stories: