அதிமுக ஓபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று கூறியவர்கள் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறினார்கள். அவர்களுக்கு கடைசி வரை ஆள் கிடைக்கவில்லை. இரட்டை தலைமை வேண்டும் என்று கூறியவர்கள் உடனடியாக வேட்பாளரை அறிவித்துள்ளோம். பாஜ வேட்பாளரை அறிவித்தால், அதன்பின் எங்களது நிலைபாட்டினை அறிவிக்கிறோம். 50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட சின்னம் இரட்டை இலை. அதனை முடக்குவதற்கு ஓபிஎஸ் ஒரு காலத்திலும் துணை போகமாட்டார். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். இரட்டை சிலை சின்னம் தொடர்பான பதிலை, நாளை (இன்று) எங்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். இரட்டை சிலை சின்னம் தற்போதைக்கு எங்களிடம்தான் உள்ளது. நாங்கள்தான் கழக ஒருங்கிணைப்பாளர். எங்களுக்குதான் சின்னம். கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்து போட்டு கொடுத்தால்தான் இரட்டை இலை கிடைக்கும். இவ்வாறு கூறினார்.