தமிழ்நாட்டு மக்களுக்கு வழக்கம்போல ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றத்தையே தந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: ஒன்றிய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு வழக்கம்போல் மிகப்பெரிய ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்துள்ள 2023-24ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டம், தமிழ்நாட்டிற்கு எந்த வித திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம், 157 மருத்துவ கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லா கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை பழைய முறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை குறைந்தது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாநிலங்களுக்கு மூலதன கடன் வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழு பயனும் வராது. மேலும், இத்திட்டத்தில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

நகர்ப்புர கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் ஒதுக்கீடு ரூ.48,000 கோடியில் இருந்து ரூ.79,500 கோடியாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும். வரவு செலவு திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றில் இருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டில் நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம், பணவீக்கம் ஆகியவற்றை புறக்கணித்து, மாநிலங்களின் நிதி சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

* புதிய திட்டம் மாநிலங்களுக்கு ஆபத்து

ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing என்ற ஒரு புதிய வழிமுறைப்படி தொடக்க முயற்சியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Related Stories: