சென்னை: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு, போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி காஞ்சிபுரம் சரக டிஎஸ்பி எம்.வேல்முருகன் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையே மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நத்தை வேகத்தில் செயல்பட்டால் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் தயங்காது. சரியான திசையில் திறமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு இறுதி வாய்ப்பாக ஒருவாரம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று எச்சரித்து விசாரணையை பிப்ரவரி 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.