பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை-பழநி வனத்துறை எச்சரிக்கை

பழநி : பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்குமென பழநி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இவ்வனச்சரகத்தில் வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்களும், அரிய வகை மூலிகைகள் மற்றும் பறவைகள் அதிகளவு உள்ளன.

இந்நிலையில் கொடைக்கானல் வனக்கோட்டம், பழநி வனச்சரகத்தில் வன பணியாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனம், கல்லூரி மாணவர்கள் இணைந்து 2023ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தினர். பாலாறு- பொருந்தலாறு அணை, கலிக்கநாயக்கன்பட்டி குளம், கோதைமங்கலம் குளம் உள்ளிட்ட பகுதிகளில் இக்கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. மேலும் பிற மாநிலங்களில் இருந்து வந்து இனப்பெருக்கம் செய்து பழநி மலைக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் வாழ்ந்து வருவது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பழநி வனச்சரகர் பழனிக்குமார் கூறியதாவது: பறவைகளை பாதுகாப்பது மனிதனின் கடமை. பறவைகள் வேட்டையாடுவது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: