சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குமரி மீனவர் படுகாயம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். அவரது மகன் ராஜேஷ் குமார் (37). சின்னமுட்டம் கிராமத்தை சேர்ந்த தொன்மை செபாஸ்டின் மகன் பிரிட்டோ, சேகர் மகன் செபாஸ்டின், பெரியக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் கபிலன், திருநெல்வேலி மாவட்டம் பெருமணலை சேர்ந்த கொர்நெளியஸ் மகன் துரைராஜ் ஆகிய 5 மீனவர்களும் சவுதி அரேபியா நாட்டில் கத்திப் என்ற பகுதியிலிருந்து சவுதி அரேபியா நாட்டில் காலம் ஹஸ்ஸான் என்ற அரேபிய முதலாளிக்கு சொந்தமான “ரஸ்மா அல் அவள்” என்ற விசைப்படகிலே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் ஆழ் கடலிலே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபியா கடலுக்குள் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு பயந்து மீனவர்கள் ஒவ்வொருவரும் படகுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். துப்பாக்கிச் சூடு முடிந்த பின்பு மீனவர்கள் படகுக்கு வெளியே வந்து பார்த்தபோது தங்களோடு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ஜெஸ்லின் மகன் ராஜேஷ்குமார் (37), தனது இடது கண்ணில் குண்டடி பட்டும், முகத்தின் காது, தொண்டை பகுதிகளிலே குண்டடி காயங்கள் பட்டு மயங்கி நிலையிலேயே இருந்துள்ளார். படகில் இருந்த மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஜிபிஎஸ், எக்கோ சவுன்டர், வயர்லெஸ் அது போன்று மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், மீனவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த செல்போன்கள் அனைத்தையும் ஈரான் கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஷ்குமாரை சவுதி அரேபியா கடலோர காவல் படையினர் மீட்டு மௌசட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்து சவுதி அரேபியா நாட்டில் தரின், கத்திப், ஜிபைல் போன்ற இடங்களிலே மீன்பிடி தொழில் செய்து கொண்டிருக்கக் கூடிய சுமார் 6,000-க்கு அதிகமான தமிழ்நாடு, கேரளாவை சார்ந்த இந்திய மீனவர்கள் அனைவரும் தங்கள் உயிருக்கு ஈரான் கடற்கொள்ளையர்களால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்பதால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். சவுதி அரேபிய அரசு தங்கள் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் குமரி மாவட்ட கடலோர ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெய சுந்தரம், தெற்காசிய மீனவர் தோழமை குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பல்தசார் மற்றும் மீனவ பிரதிநிதிகள் இணைந்து குமரி மாவட்ட கலெக்டர் வழியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளனர். அதில், ‘இந்திய அரசு உடனே சவுதி அரேபியா அரசை தொடர்பு கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை சவுதி அரேபியா அரசு கடலிலே உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: