ஊட்டி: உறை பனியில் மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க பாதுகாக்கும் பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நர்சரிகளில் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், மலர் நாற்றுக்களை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டள்ளனர்.
குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால், தற்போது தொட்டிகளில் நடவு செய்யப்படுள்ள பல்வேறு வகையான மலர் நாற்றுகள் கருகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மறைக்கப்பட்டு வருகிறது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் நேரங்களில் தொழிலாளர்கள் தண்ணீர் தெளித்து மலர் செடிகள் பனியில் கருகாமல் காத்து வருகின்றனர். மேலும், பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருக்கு ஸ்பிரிங்கலர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அலங்கார செடிகளும் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை மற்றும் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.