சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் அலுவலக வளாகத்திலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செயல் அலுவலர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், செயல் அலுவலராக வேதமூர்த்தி இருந்தார். இவர் கோயில் அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து இணை ஆணையர் வான்மதி, கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.