ஆல் இந்தியா லீடர் ஆகிவிட்டார் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தாம்பரம்: ஆல் இந்தியா லீடர் ஆகிவிட்டார் மு.க.ஸ்டாலின் என தாம்பரத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தாம்பரம் மாநகர திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் தாம்பரத்தில் நேற்று மாலை நடந்தது. திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டுபேசுகையில், தமிழ்நாடு என சொல்லக்கூடாது, தமிழகம் என்று சொல்லுங்கள் என கவர்னர் கூறினார்.

நீங்கள் தொல்காப்பியம் படித்தவரா, தமிழ் பண்டிதரா, தமிழகம், தமிழ்நாட்டுக்கு அர்த்தம் தெரியுமா? எவரோ சொல்லி கொடுத்ததை சொன்னார்.  நான் 53 வருடமாக தமிழ்நாடு சட்டசபையில் உள்ளேன். எனக்கு சட்டமன்றத்தில் சட்டமும் தெரியும், சபை நடவடிக்கையும் தெரியும். இல்லாதவற்றை ஆளுநர் படித்து மிஸ் யூஸ் செய்தார். இன்றைக்கு ஆல் இந்தியா லீடர் ஆகிவிட்டார் மு.க.ஸ்டாலின். கருணாநிதிகூட முதலமைச்சராகி பத்து, பதினைந்து ஆண்டுக்கு பிறகுதான் ஆல் இந்தியா லீடர் ஆனார். ஆனால் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு 2 தடவைதான் போனார், ஆல் இந்தியா லீடர் ஆகிவிட்டார்.

இந்திய அரசியலில் மேன் ஆப் ஆக்‌ஷன் மு.க.ஸ்டாலின் என்பது பதிவாகிவிட்டது. இதற்கு கவர்னருக்கு நன்றி. இது மாதிரி அடிக்கடி பண்ணுங்க எங்களுக்கும் பிடிக்கும். திருவள்ளுவரை மோடி பாராட்டுவதற்கு காரணம் மு.க.ஸ்டாலின்தான். நாங்கள் பாஜகவுக்கு எதிரியல்ல, நாடு முன்னேற நாங்கள் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். எங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் எங்களை அடிமைப்படுத்தி பயமுறுத்தி ஆட்சியையும் கட்சிக்காரர்களையும் வீழ்த்திவிட முடியாது. அண்ணா சொன்னதுபோல திமுக பாஷானத்தில் புழுத்த புழு இதை வேறு ஒரு பாஷானம் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். கூட்டத்தில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகர துணை செயலாளர் நரேஷ்கண்ணா, மண்டலக்குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் பெருங்களத்தூர் சேகர், திருநீர்மலை ஜெயக்குமார், செம்பாக்கம் இரா.சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாவட்ட பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: